Monday 27 July, 2009

இயற்கையின் எழிலில் இறைவனைக் காண்போம் (4) தூக்கணாங்குருவி

இயற்கையின் எழிலில் இறைவனைக் காண்போம்:(4) தூக்கணாங் குருவி
            
    மேலே:  தூக்கணாங் குருவி – பெண் பறவை 
கீழே: தூக்கணாங் குருவி - ஆண் பறவை
பறவைகளில் தையல்காரர் இருந்தால் அவர் தைப்பதற்குத் துணி வேண்டாமா? துணி என்றால் அதை நெய்வதற்கு நெசவாளர் ஒருவர் வேண்டுமே. அவர்தான் ஆங்கிலத்தில் Weaver Bird என்று அழைக்கப்படும் தூக்கணாங் குருவி. இந்தக் குருவி ஏன் வீவர் பேர்ட் என்று அழைக்கப் படுகிறது தெரியுமா? இது தன் கூட்டை நெற்பயிரின் இலைகளை நார் நாராகக் கீழித்து எடுத்துக் கொண்டு வந்து பின்னித் தயார் செய்யும். கிராமப் புறங்களிலும் இருப்புப் பாதை அருகிலும் உள்ள நீர் நிலைகளுக்கு மேலாக உள்ள கிளைகளிலிருந்து தொங்கிக் கொண்டிருக்கும் இக்கூடுகள்.
ஆரம்பத்தில் சுண்டு விரல் பருமனில் இருக்கும் இக்கூடுகள் நடுவில் ஒரு பந்து போன்று விரிந்து பின் அதன் ஒரு பக்கத்திலிருந்து ஒரு குழாயாக மாறும். கீழ் நோக்கி இருக்கும் இக்குழாய்தான் கூட்டிற்குள் செல்லும் வழி.
கூட்டினைப் பின்னுவது ஆண் பறவை. பின்னி முடியும் தருவாயில் ஆண் பறவை கூட்டின் மீது அமர்ந்து இறக்கைகளை வேகமாக அடித்தபடி “கிச் கிச் கிச் கிச்......சீ..........”. என தன் குரலை எழுப்பும். துணை தேடி. ஒரு பெண் பறவை கூட்டைப் பார்த்து ஒப்புதல் அளித்து, பின் கூட்டின் உட்புறத்தை பஞ்சு, மெல்லிய காய்ந்த வேர், சருகு இவற்றைக் கொண்டு, முட்டையிட்டு குஞ்சு பொரிக்க லாயக்காக இடம் தயார் செய்யும். மனைவி கிடைத்த ஆண் பறவை பக்கத்திலேயே மேலும் ஒன்றோ, இரண்டோ, மூன்றோ என்று கூடுகளைத் தயார் செய்து மேலும் மேலும் துணைகளைத் தேடிக்கொள்ளும்! பொல்லாத பறவை!
(பாதி கட்டப் பட்ட கூண்டினைப் பார்வையிடுகிறது பெண் பறவை. ஓலையில் உட்கார்ந்திருப்பது ஆண் பறவை.)
தூக்கணாங் குருவிகளில் திருடர்களும் உண்டு. ஒரு குருவி கஷ்டப் பட்டு நார் கிழித்துக்கொண்டு வந்து கூட்டினைப் பின்னும்போது மற்றொரு குருவி கடைசியாகப் பின்னப்பட்ட நாரினைத் திருடிச் சென்று தனது கூட்டைப் பின்னும். (இதை நான் நேரில் பார்த்திருக்கிறேன்.)
உருவத்திலும் பருமனிலும் சிட்டுக் குருவி போன்று இருக்கும் இப்பறவை உண்பதிலும் சிட்டுக் குருவி போன்றே தானியங்களைத் தின்னும். நெற் கதிர்கள் முற்றி இருக்கும் தருவாயில் கூட்டம் கூட்டமாக வந்து அவற்றைத் தின்று நஷ்டம் விளைவிக்கும்.
தூக்கணாங் குருவிக்கு முக்கிய எதிரி பாம்பு. மரத்தின் வழியே வந்து கூட்டிற்குள் சென்று குஞ்சுகளைத் தின்றுவிடும். சில சமயம் பளு தாங்க முடியாமல்கூடும் குஞ்சுகளும் பாம்புமாகத் தண்ணீரில் விழுந்து பாம்பு குஞ்சுகளைத் தின்று விழுங்கியபின் கரை ஏறிவிடும். அதனால் தானோ என்னவோ ஒரே சமயத்தில் பல குடும்பங்களைத் தயார் செய்கிறது இப்பறவை.

தூக்கணங் குருவிக்கு மற்றொரு பெயர் பாயாஎன்பது. ஒருக்கால் ஹிந்தி பெயரோ என்னவோ!
தூக்கணாங் குருவிக்கு நேர் எதிர் Sarus Crane என்று ஆங்கிலத்தில் அழைக்கப் படும் நாரை இனத்தைச் சேர்ந்த கிரவுன்ச பக்ஷி. இப்பறவை பற்றிப் பின்னர்பார்ப்போம்.
இறைவன் படைத்துள்ள இயற்கையில் தான் எத்தனை எத்தனை விநோதங்கள்!
                                                                      - நடராஜன் கல்பட்டு
                    (வண்ணப் படங்கள் மட்டும் விகிபீடியா இணய தளத்திலிருந்து)

Wednesday 15 July, 2009

வண்ணாத்திக் குருவி

இயற்கையின் எழிலில் இறைவனைக் காண்போம்        
  1. வண்ணாத்திக் குருவி
ஆங்கிலத்தில் 'Magpie Robin' என்றழைக்கப் படும் குருவியின் தமிழ்ப் பெயர் தான் வண்ணாத்திக் குருவி.  வண்ணாத்திக்கும் இந்தக் குருவிக்கும் என்ன சம்பந்தம்வண்ணாத்தியிடம் வெளுத்து இஸ்திரி செய்து வாங்கிய வெள்ளை கருப்பு உடையினை தரித்துள்ளார்ப் போன்ற நிறம் உடையதால் தான் இக்குருவிக்கு இப்பெயரோஅல்லது வண்ணத்துக் குருவி என்ற பெயர் நாளடைவில் வண்ணாத்திக் குருவி ஆயிற்றோ?
           

வண்ணாத்திக் குருவி நாம் வாழும் இடங்களில் காணப் படும் ஒரு பறவை. பிப்ரவரி முதல் ஆகஸ்ட் வரை இதைக் காண முடியும்.  மற்ற மாதங்களில் இது மரங்கள் அடர்ந்த இடங்களுக்குச் சென்றுவிடும்.  பிப்ரவரி மாதம் ப்ரகாசமான கருப்பு வெள்ளை உடை தரித்த ஆண் பறவை திடீரெனத் தோன்றி இலை உதிர்ந்த மரங்களின் உச்சாணிக்கிளைகளிலோ அல்லது மின் கம்பங்களிலோ அமர்ந்து தனது இசைப் பயிற்சியை ஆரம்பிக்கும்.  முதலில் ஸ்ருதி சுத்தமற்று நாராசமாகக் கிளம்பும் ஸ்வரங்கள் போகப் போக காதுக்கினிய கீதங்களாக மாறும்.  ஸ்ருதி சுத்தமான கீதம் கிளம்பிய சில நாட்களுக்குள் இசையில் மயங்கிய ராதையும் தோன்றுவாள்.  ராதை வேறு யாரும் இல்லை.  சற்றே பழுப்பேறிய கருப்பு வெள்ளை உடை அணிந்த பெண் வண்ணாத்திக் குருவி   தான்.  இரு குருவிகளும் ஒன்றை ஒன்று துரத்திப் பிடித்து விளையாடும். 
   
                                       ( என் குரல் புடிச்சிருக்கா ? )
இருவர் சந்தோஷமாக இருந்தால் வில்லனுக்குப் பிடிக்காது அல்லவாஎங்கிருந்தோ மற்றொரு ஆண் பறவை இவர்கள் விளையாட்டில் குறுக்கிடும்.  இரு ஆண்களுக்கு இடையே சண்டை நடக்கும்.  வில்லன் தோற்று ஓட இரு பறவைகளும் தங்களது குடும்ப வேலையைக் கவனிக்க ஆரம்பிக்கும், அதாவது வீடு, இல்லை இல்லை, கூடு கட்ட ஆரம்பிக்கும்.
வில்லன் மற்றொரு வண்ணாத்திக் குருவியாகத்தான் இருக்க வேண்டுமென்பதில்லை.  நீங்களாகக் கூட இருக்கலாம்.  ஆண் குருவி இசை மழை எழுப்பிக்கொண்டு இருக்கும் பொது நீங்கள் அதைப் போலவே சீட்டி அடித்துப் பாருங்கள்.  அது உங்களையும் தாக்கும்

ாம் எழுப்பிய இசை அதன் காதுகளுக்கு நாராசமாக இருந்ததாலா அல்லது நம்மையும் ஒரு வில்லனாக நினைத்துவிட்டதாலா என்பது அந்த ஆண்டவனுக்குத் தான் தெரியும். சொந்த அனுபவத்தில்
தான் இதைச்சொல்கிறேன்.
வண்ணாத்திக் குருவி தன் கூட்டினை மரப் பொந்துகளிலோ அல்லது வீட்டுச் சுவற்றில் உள்ள பொந்துகளிலோ அமைக்கும்.  கூடு காய்ந்த வேர்கள்,புல் மற்றும் மயிர்களால் ஆன ஒரு தட்டை மேடை (pad) ஆகும்.  செம்புள்ளிகள் கொண்ட வெளிர் நீல நிறத்திலான மூன்று முதல் ஆறு வரையிலான முட்டைகளை இப்பறவை இடும்.  குஞ்சுகள் வெளிவந்தபின் தாய் தந்தை இரு பறவைகளுமே புழு பூச்சிகளைக் கொண்டுவந்து அவற்றுக்கு அளிக்கும்.
வண்ணாத்திக் குருவியை 1965 ல் படம் பிடித்தபோது ஏற்பட்ட ஒரு சுவையான அனுபவம் இதோ.
பங்களூரில் விதான சௌதா அருகே ஜன நடமாட்டம் நிறைந்த தெரு ஒன்றில் ஒரு மரப் பொந்தில் வண்ணாத்திக் குருவி ஒன்றின் கூட்டினைக் கண்டு  நானும் எனது இரண்டு சகாக்களுமாக படம் பிடிக்க  ஆரம்பித்தோம்.  அலுவகங்களுக்கு நடந்து சென்று கொண்டிருந்தவர்கள் எங்களைக் கன்னடத்தில், "என்னங்க, என்ன செஞ்சிகிட்டு இருக்கீங்க?" என்று கேட்டனர்.  நாங்களும் பொறுமையாக பதில் அளித்து வந்தோம்.  மூன்றாவது நாள் ஒருவர் அதே கேள்வியைக் கேட்க மற்றொருவர், "விடுப்பா.  அவங்க பயித்தியம்னு நினைக்கிறேன்.  அந்த மரப் பொந்தயே நாள் பூரா பாத்துகிட்டு நிக்கறாங்க" என்றாரே பார்க்க வேண்டும்!
வண்ணாத்திக் குருவியைக் கண்டால் கவனமாகப் பாருங்கள்.  அதன் ஆடை அழகிலும், குரலிலும் நீங்களும் மயங்கிப் போய் இவற்றை அளித்த ஆண்டவனைக் கட்டாயம் காண்பீர்கள்.
                                                                                 நடராஜன் கல்பட்டு

Saturday 4 July, 2009

தையல்காரக்குருவி

இயற்கையின் எழிலில் இறைவனைக் காண்போம்:
(2)   தையல்காரக்குருவி
தையல்காரக்குருவி (Orthotomus sutorious) ஆண் பறவை (http://en.wikipedia.org/wiki/Image:Orthotomus_sutorius.jpg)
மனிதர்களில்மட்டும் தானா தையல்காரர்கள்பறவைகளில் இல்லையாஏன் இல்லை.  ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் உங்கள் தோட்டத்தில் "கிவீ...கிவீ..." என்று கணீரென  ஒரு குருவியின் குரல் கேட்கிறதாசற்று கூர்ந்து கவனியுங்கள்.  பறவையின தையல்காரரை உங்களால் பார்க்க முடியும்.  அதுதான் 'Tailor bird' என்று ஆங்கிலத்தில் அழைக்கப் படும் தையல்காரக்   குருவி. 
குடும்பம் பெருக்கும் காலத்தில் ஆண் தையல்காரக் குருவியின் வால் இறகுகளில் நடு இரண்டு இறகுகள் நீண்டு வளரும், கிட்டத் தட்ட இரு மடங்காக.  (வண்ணப் படத்தில் உள்ள ஆண் குருவியின் வால் இறகுகளைப் பாருங்கள்)
இந்தக் குருவி தன் கூட்டினை எப்படி அமைக்கும் தெரியுமா?
சற்றே அகலமான இலயினைத் தேர்ந்தெடுத்து அதனை பறந்து கொண்டிருக்கும் போதே வளைத்துப் பிடித்துக் கொண்டு சிலந்தி வலையினைக் கொண்டு சுற்றி ஒட்டும்.  பின் அவ்வாறு தயார் செய்த ஃபனல் போன்ற குழாய் உள்ளே பஞ்சினைக் கொண்டு வந்து வைக்கும்.  தனது கூறிய அலகினைக் கொண்டு இலயின் விளிபில் சிறு துவாரங்கள் செய்து அத்துவாரங்களின் வழியே பஞ்சினை வெளியே இழுத்து அதை பின் தட்டையாக்கும்.  இவ்வாறு செய்வதால் 'ரிவெட்' அடித்தாற் போல கூடு தயார் ஆகிவிடும்.  ஃபனலின் அடிப் பாகத்தில் பஞ்சினாலும்காய்ந்த மெல்லிய வேர்கள் நுனிப்புல் இவற்றாலும் குழிவாக மெத்தை  தயார் செய்யும். (குருவிக்கு பஞ்சு எங்கிருந்து கிடைக்கும் என்று யோசிக்கிரீர்களாகுப்பை மேட்டிலிருந்துதான்) 
இவ்வாறு தயார் செய்த மெத்தையில் 2 முதல் 6 வரை வெளிர் நீலக்கலரிலான முட்டைகளை இடும். தாய் தந்தை இரண்டுமே மாறி மாறி அடை காப்பதிலும் பின்னர் குஞ்சுகள் வெளிவந்தவுடன் அவற்றுக்கு உணவு அளிப்பதிலும் ஈடு படும்.
 
(குஞ்சுகளுக்கு ஆகாரம் இதோ அலகின் நுனியில்)
தையல்காரக் குருவிகள் பறக்கும் போது வலுவு அற்றவைகக் காணப்படும். ஆனால் குரல் எழுப்பும்போதோ வலுவு எங்கிருந்து வருமோ, அதனைப் படைத்த ஆண்டவனுக்குத்தான் தெரியும் அந்த ரகசியம்.
தையல்காரக் குருவிகள் தூங்கும் போது பார்பதற்கு வெகு அழகாக இருக்கும்.  இரு பறவைகளும் அருகருகே ஒரு கிளையில் உட்கார்ந்து கொண்டு உடலில் உள்ள அத்தனை இறகுகளையும் வெளித் தள்ளிக் கொண்டு (puffing up the feathers) ஒரு பூப்பந்துபோல செய்துகொண்டு தூங்கும்.  இது எதற்காக என்று தெரியுமா? குளிரின் தாக்கத்திலிருந்து தப்பிக்கத் தான்.
(எங்களுக்குத் தூக்கமா வருது)
நாம் தூங்க ஆரம்பிக்கும் போது நம் கைகளிலே ஏதாவது ஒரு பொருளை வைத்துக் கொண்டு இருந்தால் சற்று நேரத்திற்கெல்லாம் நமது கை தானாக விரிந்து கொண்டு கையில் உள்ள பொருள் கீழே விழுந்துவிடும்.  சிறு குழந்தைகள் தூங்கச் செல்லும் போது மிகவும் பிடித்த பொருளை கையில் வைத்துக் கொண்டிருக்கும்.  ஆனால் தூக்கம் வந்த சற்று  நேரத்திற்கெல்லாம் அப்பொருள் கையிலிருந்து விடுபட்டு படுக்கையில் விழுந்துவிடும். இதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஆனால் பறவைகள் தூங்கும் போதோ அவற்றின் விரல்கள் இறுகிக் கொண்டே போகும்.  அதனால் அவை ஒரு போதும் கீழே விழாது. 
இயற்கையில் இறைவன் காட்டும் விந்தைகள் தான் எத்தனை!
                                                                       நடராஜன் கல்பட்டு