Saturday 9 March, 2013


இயற்கையின் எழிலில் இறைவனைக் காண்போம் (24)
பிணம் தின்னிக் கழுகு அல்லது பெருங்கழுகு  (Vulture)

http://en.wikipedia.org/wiki/File:Gyps_rueppellii_-Nairobi_National_Park,_Kenya-8-4c.jpg

இறைவன் எந்த ஒரு உயிரிடத்தும் பாரபட்சம் காட்டுவதில்ல.  ஒவ்வொன்றும் அது வாழ்வதற்கேற்ற அமைப்புககளை, தேவைகளை அளிக்கிறான்.  உதாரணம் வேண்டுமா  படியுங்கள் மேலே.

பிணம் தின்னிக் கழுகு என்று ஒரு பறவை.  இது நாம் சாதாரணமாகப் பார்க்கும் கருடன், கழுகு, வல்லூறு இவைகளின் இனத்தை சேர்ந்தது.  ஆனால் உருவத்தில் பெரியது.  இவற்றின் உணவு இறந்த அல்லது இறந்து கொண்டிருக்கும் மிருகங்களின் மாமிசம்.  ஏன், உலகெங்கும் உள்ள பார்ஸீ என நாம் அழைக்கும் சொராஷ்ட்றியன் (சூரிய உபாசிகள்) என்ற இனத்தவரது இறந்த உடல்கள் கூடத்தான் இப்பறவைகளின் உணவு.


http://jameswhipple.info/images/uploads/Parsee_Tower_of_Silence_Bombay.jpg
பார்ஸீக்கள் ஊரில் ஒரு உயரமான இடத்தில் அகலமான வட்ட வடிவிலான தொட்டி ஒன்றைக் கட்டி வைத்திருப்பார்கள்.  அதற்கு அமைதியின் கோபுரம் என்று பெயர்.  ஆங்கிலத்தில் Tower of silence என்றழைப்பார்கள் அதை.  இறந்தவர்களின் உடலை அதனுள் எறிந்து விடுவார்கள் பார்ஸீக்கள்.  அவ்வாறு எறியப் பட்ட உடல்கள் பிணம் தின்னிக் கழுகுகளுக்கு உணவாகும்.

பிரதேசத்துக்குப் பிரதேசம் இந்தக் கழுகுகளின் தலை கழுத்து இவற்றின் நிறம் மஞ்சள், சிவப்பு, வெள்ளை, வெளிர் கருப்பு என மாறு பட்டாலும் ஒரு விதத்தில் இப்பறவைகள் ஒரே மாதிரி இருக்கும்.  தலையிலும் கழுத்திலும் சிறகுகள் இருக்காது மற்ற பறவைகளைப் போல இவற்றுக்கு.  இது ஏன் தெரியுமா?

  Griffin vulture
வெள்ளைத் தலை

 Turkey_vulture_Bluff.jpg
 சிவப்புத் தலை

இந்தப் பறவைகள் பிணத்தினைக் கிழித்து உள்ளிருந்து மாமிசத்தைப் பிய்த்தெடுத்துத் தின்னும்போது ரத்தமும் வேறு சில திரவங்களும் தலையிலும் கழுத்திலும் ஒட்டிக்கொள்ளும்.  சிறகுகள் இருந்தால் அவற்றுக்கடியில் தங்கிவிடும் இப் பொருட்களில் இருந்து கிருமிகள் உண்டாகும்.  சிறகுகள் இன்றி மொட்டையாக இருக்கும் கழுத்து தலை இவற்றின் மீது படிந்துள்ள இப்பொருட்கள் சற்று நேரத்தில் வெய்யிலும், காற்றும் பட்டுக் காய்ந்து விடுமாதலால் கிருமிகள் உண்டாகாது.

இவ்வகைக் கழுகுகள் தங்கள் கழுத்தின் நீளத்தினை தேவையான அளவு நீட்டவோ குறைத்துக் கொள்ளவோ முடியும்.  இது எதற்காக தெரியுமா?  பிணத்தின் உள்ளே தலையை விட்டு மாமிசம் பிடுங்கத்தான்.



மேலே உள்ள படத்தில் கழுகு தன் கழுத்தின் நீளத்தை சற்றே குறைத்துக் கொண்டிருப்பதால் தோலில் சுருக்கம் தெரிகிறது பாருங்கள்.

பிணம் தின்னிக் கழுகுகளுக்கு இறைவன் அளித்துள்ள வரங்கள் இன்னும் சில உள்ளன.  ஒன்று அவற்றின் கூரி வளைந்த அலகுகள்.  மற்றொன்று கண்களிலே மூன்றாவது இமை.


மூன்றாம் இமை

நம் கண் இமைகளை நாம் அடிக்கடி சிமிட்டுவது விழிகளில் எப்போதும் ஈரப் பசை இருக்க வேண்டும், கண்ணில் விழும் தூசியினை அவ்வப்போது ஓரம் கட்ட வேண்டும் என்பதற்காக.  இந்த வசதி கழுகிற்கும் வேறு சில பறவைகளுக்கும், மிருகங்களுக்கும் சற்று அதிகமாகவே தேவைப் படுகிறது.  காரணம் அவை உணவு தேடும் விதம்.  ஆகவேதான் இறைவன் அவற்றிற்கு இந்த மூன்றாவது இமையினை அளித்திருக்கிறான்.

தெரிகிறதா கரு விழியையும் சற்றே முடிய மூன்றாம் இமைமூன்றாம் இமை, (ஆங்கிலத்தில் இதன் பெயர் Nictitating membrane என்பதாகும்.), மேலும் கீழுமாக அசைவதில்லை.  பக்க வாட்டில் நகரும்.  கழுகினத்தின் மூன்றாம் இமை முற்றிலும் ஒளி ஊடுருவிச் செல்வதாக அமைந்தது அல்ல.  சிறிது குழம்பியே இருக்கும்.  ஆனால் கோழிக்கும் வேறு சில பறவைகளுக்கும் இந்த மூன்றாம் இமை தெள்ளத் தெளிவாக இருக்கும். 


http://en.wikipedia.org/wiki/File:Chickenblinking.jpg
கோழியின் தெள்ளத் தெளிவான மூன்றாம் இமை

கோழி குப்பை மேட்டில் மண்ணைக் கிளறி இரை தேடும்போது அதன் கண்களில் மண்ணும், தூசியும் கட்டாயம் விழும்.  இதை எதிர் கொள்ளத்தான் கோழிகளுக்கு இந்த மூன்றாம் இமை.

மரங்கொத்திக்கும் மூன்றாம் இமை உண்டு.  அது மரத்தினை வேகமாகக் கொத்தும்போது விழிகள் வேளியே தெறித்து விடாமல் இருக்க அது தன் மூன்றாம் இமைகளால் தன் கண்களை இறுக்க மூடிக்கொள்ளுமாம்.

கழுகை விட்டு அதிக தூரம் போய் விட்டோம்.  மீண்டும் கழுகுக்கு வருவோம்.

சொல்ல மறந்த ஒரு விஷயம் இந்தக் கழுகுகளின் கண், மூக்கு இவற்றின் அபார சக்தி பற்றி.  ஆகாயத்தில் பல ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருக்கும் போதே தரையில் எங்கு ஒரு மிருகம் செத்துக் கொண்டிருக்கிறது அல்லது செத்துக் கிடக்கிறது என்பதை மிகத் துல்லியமாகக் கண்டறிய வல்லது இப்பறவை.

எகிப்தியக் கழுகு என்னும் கழுகு பிணந்தின்னிக் கழுகளை விட உருவத்தில் சற்றே சிறிதானது.  மஞ்சள் நிறத் தலையும் வெள்ளை நிறச் சிறகுகளையும் கொண்ட ஒரு வகைக் கழுகு இது.  இதை கிராமப் புரங்களில் பார்க்கலாம்.  இவை இறந்த உயிரினங்களைத் தின்பதோடு மட்டும் அல்லாமல், கசாப்புக் கடைக் காரர்கள் எறிந்திடும் கழிவுப் பொருட்களையும் தின்று தீர்க்கும்.  அவ்வளவு ஏன், மனித மலத்தினையும் உண்ணும்!  இந்த வகைக் கழுகின் பெயர் ஆங்கிலத்தில் ‘Scavenger vulture அல்லது ‘Pharaoh’s chic’ என்பதாகும்.  ஆதி நாளைய எகிப்த்திய மன்னர்களின் கிரீடத்தினை அலங்கரித்தவை இவை.



தமிழ் நாட்டில் திருக்கழுக் குன்றத்தில் தினம் பகல் பன்னிரெண்டு மணிக்கு அங்குள்ள வேதகிரீஸ்வரரின் கோவில் பூஜாரி இறைவனுக்கு நெய்வேத்தியம் செய்த சர்க்கரைப் பொங்கலை ஒரு கல்லின் மீது வைக்க எங்கிருந்தோ வரும் இரு எகிப்தியக் கழுகுகள் அதை உண்ணும் காட்சியை ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு நான் நேரில் கண்டிருக்கிறேன்.  (இப்போதெல்லாம் அவை வருவதில்லை என்று சொல்கிறார்கள் சிலர்.)

இந்தப் பறவைகள் இரு ரிஷிகள் என்றும், அவர்கள் தினமும் கங்கை, திருக் கழுக்குன்றம், ராமேஸ்வரம் ஆகிய இந்த மூன்று இடங்களுக்கும் சென்று வருவதாகவும் சொல்வார்கள்.  ஸ்தல புராணத்திலும் இது இருப்பதாகக் கேள்விப் பட்டிருக்கிறேன்.

இந்தக் காட்சி பறவைகள் நிபுணர் காலஞ்சென்ற டாக்டர் சாலிம் அலி அவர்களையே வியக்கச் செய்தது.  இந்தியப் பறவைகள் பற்றிய அவரது புத்தகத்தில் எழுதி உள்ளார், இப்பறவைகள் ஒரு மனிதனால் பழக்கப் பட்டவை என்றால் அவற்றைப் பழக்கப் படுத்தியவர் யார்?  ஒரு ஜோடிப் பறவைகள் இறந்தால் அடுத்த ஜோடியினைத் தயார் செய்வது யார்?  ஏன் ஒரு ஜோடியே வருகின்றன? என்று.

எகிப்தியக் கழுகு ஒன்று அல்லது இரண்டு முட்டை இட்டுக் குஞ்சு பொரிப்பது கோவில் கோபுரங்களிலோ அல்லது பாழடைந்த கட்டிடங்களிலோ.  குஞ்சுகளுக்கு அவை அளித்திடும் உணவு பாம்பு, ஓணான், தவளை போன்றவை.  குஞ்சுகளின் சிறகுகளின் நிறம் தாய் தந்தைப் பறவையின் நிறத்திற்கு நேர் மாறானது.  பெரிய பறவைக்கு எங்கெல்லாம் வெள்ளைச் சிறகுகள் இருக்கின்றனவோ அங்கெல்லாம் குஞ்சுக்கு கருப்புச் சிறகுகளும், எங்கெல்லாம் கருப்புச் சிறகுகள் இருக்கின்றனவோ அங்கெல்லாம் வெள்ளை சிறகுகளும் இருக்கும்.  குஞ்சுகள் வளர்ந்திடும் போது நிறம் முற்றிலுமாக மாறி விடும்!

இயற்கையில் தான் எத்தனை வேடிக்கை காட்டுகிறான் இறைவன்!


நடராஜன் கல்பட்டு                                       


2 comments:

  1. விளக்கங்கள் வியப்பை தருகிறது... நன்றி...

    கண்... யப்பா...!

    ReplyDelete
  2. அருமையான விஷயங்கள். பறவைகளின் மூன்றாம் இமையை நானும் பார்த்திருக்கிறேன். இதோ ஒரு படம் இங்கே..

    http://www.flickr.com/photos/abyss3/5456194273/in/set-72157625739075083


    சென்ற வாரம் திருகழுகுன்றம் சென்றிருந்தேன். ஆனால் வெதகிரீச்வரரை மட்டும் தான் பார்க்க முடிந்தது, கழுகை காணோம்..

    ReplyDelete