Tuesday 25 March, 2014

இயற்கையின் எழிலில் இறைவனைக் காண்போம் (34)  பச்சோந்தி



ஓணான், பல்லி, பாம்பு இனத்தைச் சேர்ந்த பச்சோந்தி ஒரு வினோதப் பிராணி.  இதைப்  பற்றிய சில தகவல்கள் இதோ. புத்தகத்தில் படித்தவை அல்ல.  நேரில் கண்டறிந்தவை.

பச்சோந்தி நிறம் மாறும் என்பது உண்மை.  ஆனால் நினைத்தபடி எல்லாம் அது இருக்கும் சுற்றுப் புரத்திற்கேப்ப நிறம் மாறும் என்பது தவறு.  சாதாரணமாக பச்சை நிறத்திலே சில சிறு கருப்புக் கட்டங்களுடன் காணப்படும் இது கொஞ்ச நேரத்திற்கு ஒரு தடவை நல்ல பச்சை நிறத்திலிருந்து, கரும் பச்சையாகவொ அல்லது வெளிர் பச்சையாகவோ மாறுகிறது.  அதன் மீதுள்ள கருப்பு புள்ளிகளோ கட்டங்களோ சற்றே மாறுகின்றன.

பச்சோந்திகளிடம் பல வியக்கத் தக்க விஷயங்கள் உள்ளன. அவை வருமாறு.

உருவத்தில் ஓணான் மாதிரித் தோன்றினாலும் இது ஓணான் போல வேகமாக ஓடக்கூடிய ஒன்றல்ல.  முன்னும் பின்னுமாக ஆடி ஆடி நிதானமாக ஒரு ஒரு அடியாக காலை முன் வைத்து நகரும்.

பச்சோந்திக்கு முதல் எதிரி காகம்.  பச்சோந்தியைக் கண்டால் விடாது.  கொன்று தின்றுவிடும்.  காகத்திடம் இருந்து தப்புவதற்குத் தான் இவை இருக்கும் தாவரங்களின் பச்சை நிறத்தையே இதற்கும் ஆண்டவன் கொடுத்திருக்கிறான். 

பச்சோந்தியின் கண்கள் இரண்டும் தனித் தனியே இயங்கக் கூடியவை.  ஒரு கண் முன்புறம் பார்க்கும் போது மற்றொன்றால் அது பின் புறம் பார்க்கும்.  அவ்வாறு பார்ப்பதை மாற்றிக் கொண்டே இருக்கும்.  கண்கள் ஒரு உருண்டையான தோல் பைக்குள் இருக்கும் சுமார் ஒன்று புள்ளி ஐந்து மில்லிமீடர் அளவிலான் சிறு ஓட்டை கொண்டதாக.  கண்களைத் தனித் தனியாக எல்லாப் பக்கமும் சுற்ற வல்லது பச்சோந்தி.

பச்சோந்தியின் வால் அதற்கு ஐந்தாவது கால்.  ஒரு குச்சியில் இருந்து மற்றொன்றுக்குத் தாவும் போது முதலில் உடலை கவிழ்த்து வைத்த ஆங்கில எழுத்து யூ போன்று வளைத்துக் கொண்டு முன்னங் கால்களைக் கொண்டு புதிய குச்சியைப் பிடிக்கப் பார்க்கும். எட்டவில்லை என்றால் முதுகை நிமிர்த்தி உடலை நீட்டி முன்னே உள்ள குச்சியைப் பிடிக்கப் பார்க்கும்.  அப்போதும் எட்ட வில்லை என்றால் தனது வாலை இருக்கும் குச்சியில் விஷ்ணுச் சக்கரம் போன்று சுருட்டிக் கொண்டு நான்கு கால்களையும் விட்டு விட்டு எட்டிப் பார்க்கும்.  மீண்டும் எட்ட முடிய வில்லையா?  விஷ்ணுச் சக்கரத்தினை மெதுவாகப் பிரித்து குச்சியை எட்டிப் பிடிக்கப் பார்க்கும்.  அப்பொதுகூட எட்ட வில்லையாபேசாமல் வாலை மீண்டும் விஷ்ணுச் சக்கரமாகச் சுருட்டி உடலை பின்னே இழுத்து வந்த வழியெ திரும்பி விடும்.


விஷ்ணுச் சக்கர வாலையும் கால் விரல்களையும் கண் அமைப்பினையும் பாருங்கள்

பச்சோந்தியின் நாக்கு கிட்டத் தட்ட அதன் உடல் நீளத்திற்கே ஆனது.  வேண்டும்போது நீட்டி முன்பக்கமாக சாட்டை போல வேளியே மின்னல் வேகத்தில் தள்ளி பசை கொண்ட நுனி நாக்கால்  அதற்கு மிகவும் பிடித்த உணவான ஈ மற்றும் சிறு புழு பூச்சிகளைப் பிடித்துத் தின்னும்.  நாக்கு ஒட்டிக் கொண்டிருப்பதும் அடி வாயில் அல்ல.  நுனி வாயில்.

பச்சோந்தியின் முன்னங் கால்களில் வெளிப்புறம் இரெண்டும் உட்புறம் மூன்றுமாக ஊள்ள நகங்கள் பின்னங் கால்களில் வெளிப் புறம் மூன்றும் உட்புறம் இரெண்டுமாக இருக்கும்.

இப்படிப் பல வியக்கத் தக்க விநோதங்களை பச்சோந்திக்கு அதன் வாழ்க்கைக்கேற்ப அளித்திருக்கிறான் ஆண்டவன்.

பச்சோந்தி நல்ல பாம்பு போன்று விஷம்கொண்டது என்பர் சிலர்.  இது முற்றிலும் தவறான ஒரு கருத்து.  கொல்லப்படவிருந்த ஒரு பச்சோந்தியை காப்பாற்றும் பொருட்டு அதன் வாய்க்குள் என் விரலை விட்டிருக்கிறேன்.  அதுவும் நன்றாகக் கடித்தது.  ஆனால் இன்றும் நான் உயிருடன் தான் இருக்கிறேன்.  அந்தப்  பச்சோந்தியும் அன்று பிழைத்தது. 
            

ஆமை வேகத்தில் நகரும் பச்சோந்தி

பச்சோந்தி என்றால் பச்சையாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை.  வேறு நிறங்களிலும் இருக்கலாம். அடுத்து வரும் படங்களைப் பாருங்கள்.



இயற்கையின் எழிலைக் கண்டு ரசியுங்கள்.  இறைவனை நீங்கள் நிச்சயம் காண்பீர்கள்.

                                            நடராஜன் கல்பட்டு


                                                      ( வண்ணப் படங்கள் மட்டும் கூகுகிள் இணய தளத்திலிருந்து )


Sunday 9 March, 2014

இயற்கையின் எழிலில் இறைவனைக் காண்போம் (33)
இறைவன் படைத்த ஹெலிகாப்டர்கள்


மேலெழும்ப, கீழிறங்க, முன்னே செல்ல, பின்னே செல்ல, ஒரே இடத்தில் பறந்திட என்று பல வேலைகளையும் செய்திட மனிதன் படைத்தான் ஹெலிகாப்டர்களை இன்று. 

என்றோ படைத்திட்டான் ஹெலிகாப்டரை இறைவன்.

பறவைகளில் தேன் சிட்டு, அமெரிக்காவின் ஹம்மிங் பேர்ட், பூச்சிகளில் தும்பி, தேனீ, பம்பிள் பீ என்னும் கரி வண்டு இவை எல்லாமே ஹெலிகாப்டரைப் போல மேலெழும்பவோ, கீழிறங்கவோ, முன் செல்லவோ, பின் செல்லவோ, பக்க வாட்டில் திரும்பவோ, ஒரே இடத்தில் பறக்கவோ முடிந்த உயிரினங்கள்.

தேன் சிட்டு
                              

      ஹம்மிங் பேர்ட்

தும்பி

தேனீ

கரி வண்டு (Bumble bee)

சில தாவரங்களின் விதைகளும் காற்றில் பறந்து செல்லும் தன்மை உடையவை.   ஆனால் அவை தானாகப் பறந்திடுவதில்லை.  காற்று வீசிடும் திசையில் எல்லாம் அவையும் பறந்து சென்று, பின் தரையை அடைந்து தக்க தருணம் வரும் போது புதிய செடியாக முளைத்திடும்.  உதாரணத்துக்கு இலவம் பஞ்சு, எருக்கு, கைரோகார்பஸ் என்றழைக்கப் படும் மரம் இவற்றின் விதைகள் காற்றின் உதவி கொண்டு பறந்து செல்லும்..


எருக்கஞ்செடியின் விதை.  காற்றில் பறந்து செல்லும் இதை தாத்தா பூச்சி என்போம். 

   
      கைரொகர்புஸ் விதை       


 
மரத்தில் இருந்து விழும்போது கைரொகார்பஸ் விதை பறந்து செல்லும் அழகினைப் பார்க்க கீழுள்ள இணைப்பிற்குச் சென்று பார்க்கவும்..
இயற்கையில் தான் எத்தனை வினோதங்கள்!

(கருப்பு வெள்ளை படம் மட்டும் எடுத்து நடராஜன் கல்பட்டு.  மற்றவை இணைய தளங்களில் இருந்து)

நடராஜன் கல்பட்டு